Saturday, May 30, 2015

சீவக சிந்தாமணியில் பஞ்சாசரத்தின் மகிமை


பஞ்ச நமஸ்காரத்தின் மேன்மை:-


 

                       ஓம்  நமசிவாய


பஞ்ச நமஸ்காரம் என்பது சமண சமயத்தின் மூல மந்திரம். இதன் பெருமையை உணர்த்தும் நிகழ்ச்சி ஒன்று குணமாலையார் இலம்பகத்தில் இடம்பெறுகிறது.

அந்தணர்க்கு ஆக்கிய சோற்றுத்திரளை நாயொன்று கௌவிச் சென்றது. அதனால் கோபங்கொண்ட அந்தணர் நாயை அடிக்க ஓடினர். நாய் அஞ்சி ஓடி, அருகில் இருந்த குளத்தில் பாய்ந்தது. அதனை அடித்து, அதன் காலை ஒடித்தனர் அந்தணர். அதனைக் கண்ட அந்த நாயின் சொந்தக்காரனான குடிகாரன் (கட்குடியன்) மிகுந்த துன்பம் கொண்டான். அவன் துன்பத்தைக் கண்ட சீவகன், இறந்துபடும் நிலையில் வேதனையோடு துன்பப்படும் நாயின் செவியில் பஞ்சநமஸ்காரத்தை ஓதுகிறான். நாயும் தன் செவி மடுத்து அதைக் கேட்கிறது. சிறிது நேரத்தில் அந்த நாய் சுதஞ்சணன் என்னும் தேவனாகி வானோக்கிச் சென்று தனக்கு நடந்தவைகளையெல்லாம் உணர்ந்து கொள்கிறான். சீவகனின் இச்செயல் பின்வரும் பாடல்வழியே விளக்கம் பெறுகிறது:
உறுதிமுன் செய்தது இன்றி ஒழுகினேன் என்று நெஞ்சில்
மறுகல்நீ பற்றொடு ஆர்வம் விட்டிடு மரண அச்சத்து
இறுகல்நீ இறைவன் சொன்ன ஐம்பத அமிர்தமுண்டால்
பெறுதி நற் கதியை என்று பெருநவை அகற்றினானே
(சீவக.சிந்:946)


இதன் பொருளாவது:
முன்னே செய்த நன்மை ஒன்றுமில்லை என்று நினைத்து நீ வருந்தவேண்டாம். பற்றையும் ஆர்வத்தையும் விட்டுவிடு; இறப்பு என்னும் அச்சத்தைக் கொள்ளாதே; அப்படியிருந்து இறைவன் கூறிய ஐம்பதமாகிய அமிர்தத்தை (பஞ்சநமஸ்காரம்) நீ பருகினால் நல்ல கதியை அடைவாய் என்று கூறி, நாயின் பெருந்துன்பத்தை நீக்கினான்.

                  குருவே சரணம் சரணம்

No comments:

Post a Comment