நிலையாமைக்
கோட்பாடு
|
சச்சந்த மன்னன், மனைவி விசயைபால் வைத்த அன்பால் ஆட்சியை
மறந்து அமைச்சன் கட்டியங்காரனிடம் ஆட்சியை ஒப்படைத்து இன்பத்தில்
மூழ்குகிறான். கட்டியங்காரன் மன்னனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து, மன்னனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்ற எண்ணுகிறான். அதையறிந்த சச்சந்த
மன்னன் மயிற்பொறி (மயில் வடிவில் அமைந்த, வானில் செல்லும் இயந்திரம்) செய்ய ஏற்பாடு செய்து வான்வழி தப்பித்துச்
செல்லும்படி அரசியிடம் கூறுகிறான்.
பிரிந்து செல்ல வருந்தும் அரசியிடம் சச்சந்த மன்னன் நிலையாமை
பற்றிப் பேசி ஆறுதல் அளிக்கிறான். ‘இறப்பும், பிறப்பும், ஆக்கமும்
அழிவும் ஆகிய யாவும் பொருள்களுக்கு இயற்கை. சாதல்
முதலியவற்றுக்குத் துன்புறுதலும் பிறத்தல் முதலியவற்றுக்கு இன்புறுதலும் ஆகிய
இச்செயற்கெல்லாம் காரணம் அறிவின்மையே’ என்கிறான். மேலும், ‘பழமையான
நம் பிறப்புகளை ஆராய்ந்தால் தோண்டப்பெற்ற கடலின் மணலும் ஒப்பிட முடியாத அளவினை உடையது. அப்பிறப்புகளிலெல்லாம் பிறந்தும் வேறுபட்டிருந்தோம்.
இனியும் பிரிந்து செல்லும் பிறப்புகளில் ஒன்றுபடோம். அதனால் இந்த உறவைப் பெரிதாக எண்ணி
இரங்க வேண்டாம். அருகன் கூறிய நூல்களின் பொருளை அறிந்த நீ வருந்தலாமா?’
என ஆறுதல் கூறி அனுப்புகிறான்.
இத்துணை விவேகமுள்ள மன்னனா காமத்தினால்
அழிந்துபட்டான்?
நம்
உள்ளத்திலும் அவலம் நிறைகிறது. கழிகாமம் அறிவை அழித்துக்
கடமையை மறக்கச் செய்யும். எனவே தான் மீண்டும்
மீண்டும் காமம் கொடியது என்கிறார்கள் எல்லாச் சமயப் பெரியார்களும்.
இதே போன்று ‘நிலையாமைக் கோட்பாடு’ காப்பியத்தின் பிறபகுதியிலும் விளக்கம் பெறுகிறது. சீவகன் கட்டியங்காரனைக்
கொன்று, அறவழியில் ஆட்சி நடத்துவதைக் காணும் பேறு பெறுகிறாள்.
அவன் தாய் விசயை, வாழ்க்கையில் நிறைவு எய்திய நிலையில் துறவு
மேற்கொள்ள விழைகிறாள். அதையறிந்து துயருறும் சீவகனுக்கும் உறவினருக்கும் விசயை
அறிவுரை வழங்குகிறாள்.
‘இவ்வுலகில்
நம்முடைய வாழ்நாட்கள் எவ்வளவு என்பதை யாரும் அறியமாட்டோம். ஆனால் நெடுநாள்
வாழ்ந்து கொண்டேயிருப்போம் என்னும் ஆசையில் அழுந்திக் கிடக்கின்றோம். திடீரென்று
எமன் ஒருநாள் வந்து நம் வாழ்வைப் பறித்து, உயிரைக் கொல்லும் போது அதைக்கண்டு அஞ்சிக் கண்ணைப் பொத்திக் கொண்டு
அழுவதல்லால் நாம் வாழ்ந்து கழிந்த நாட்களை நம்மால் மீண்டும் திரும்பப் பெறமுடியுமா?’
(சீவக.சிந் 2616).
குருவே சரணம் சரணம்
No comments:
Post a Comment