Saturday, May 30, 2015

நம் வினையின் கோட்பாடு


வினைக்கோட்பாடு:-


காந்தருவ தத்தையார் இலம்பகத்தில் சீதத்தன் என்னும் பெரும் வணிகனின் மரக்கலம் காற்றாலும் மழையாலும் கலக்குற்ற போது, தன்னுடன் வந்தவர் அஞ்சி நிற்கையில் ஊழ்வினையின் வலிமையை எடுத்துரைத்து, அஞ்சாமல் இருக்க அறிவுரை கூறுகிறான். துன்பம் வந்தபோது எரியும் விளக்கு காற்றால் நடுங்குவது போல் நடுங்காமல் மகிழ்க. அது அத்துன்பத்தைப் போக்கும் கருவியாகும். அத்துன்பத்தை எண்ணித் துக்கமுற்றால் அத்துக்கத்தினின்றும் நீங்கினார் யாருமில்லை. வரத்தக்கவை வந்தேதீரும். அவ்வாறு வரும் போது கலங்காது மலர்ச்சியோடு இருக்க வேண்டும். அதுவே அந்தத் துன்பத்தைப் போக்கும்’.

மேலும், வாழ்நாள் முடிந்தால் பொற்கிண்ணத்தில் உள்ள நீரைக் குடித்தாலும் கொல்லும். கடலின் நடுவே சென்று மூழ்கினாலும் நல்வினைப் பயனால் பிழைத்துக் கொள்வார். ஊழின் ஆற்றல் அத்தகையது என்பான் சீதத்தன்.

காப்பியத்தின் இறுதியில் துறவை மேற்கொள்ள விரும்பும் சீவகனுக்குச் சாரணர் வழங்கும் அறிவுரையிலும் வினையின் ஆற்றல் அருமையான உவமைகளுடன் சொல்லப்படுகிறது.

அல்லித்தண்டு அற்று வீழ்ந்த போதும் நூல் அறாது தொடர்ந்து நிற்கும் தன்மைபோல, பழைய தம் உடம்பு உயிரை நீங்கிக் கிடக்க, பழைய தீவினை மட்டும் நீங்காமல் உயிரைத் தொடர்ந்து, அவ்வுயிர் போய்ப் புகுந்த உடம்பில் தானும் புகுந்துவிடும். அத்துடன் அளவற்ற துன்பம் செய்யும் கொடிய நெருப்பாகச் சுட்டு எரித்து விடும். அதனால் அறத்தை உடைய மனத்தராய், பல்லுயிர்க்கும் அருளைச் செய்தால் அப்பழமையான நல்வினை, பறவையும் நிழலும் நீங்காது திரியுமாறுபோல, அவ்வுயிரை விடாமல் திரிந்து கறவைப் பசுவைப்போல் விரும்பிய அனைத்தையும் தரவல்லது.

No comments:

Post a Comment